வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் கோட்டீஸ்வரி தெரிவித்தார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது தொடர்பாக பல்வேறு வணிகர் சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
சேலம் கோரிமேட்டில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை கட்டட வளாகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு தொழிலாளர் உதவி ஆணையர் கோட்டீஸ்வரி தலைமை வகித்தார். கூட்டத்தில் அனைத்து வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களும் அவரவர் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் கோட்டீஸ்வரி கூறியதாவது:
ஏப்ரல் 18-ஆம் தேதி விடுமுறை அளிக்க தவறும்பட்சத்தில் புகார் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் சேலம் செவ்வாய்ப்பேட்டை மளிகை வர்த்தக நலச் சங்கம், இரும்பு, பெயிண்ட் விற்பனையாளர்கள் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், எரிவாயு விநியோகஸ்தர்கள் சங்கம், பெட்ரோலியம் உரிமையாளர்கள் சங்கம், மளிகை சில்லரை வியாபாரிகள் சங்கம், ரீடைல் வியாபாரிகள் சங்கம் மற்றும் தொழிலாளர் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.