சேலத்தில் மது பதுக்கி விற்பனை செய்த மூதாட்டி உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சேலத்தில் பல்வேறு பகுதிகளில் மது பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில், கொண்டலாம்பட்டி உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார், கொண்டலாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பழனிசாமி (32), மதுபானம் பதுக்கி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார், பழனிசாமியை கைது செய்து அவரிடமிருந்த 8 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஜங்சன் பகுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரனை (40), போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த 8 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் மது விற்பனை செய்ததாக சண்முகசுந்தரத்தை (47), போலீஸார் கைது செய்து, அவரிடமிருந்த 8 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் சித்ரா தலைமையிலான போலீஸார் ஜெ.ஜெ.கார்டன் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, மது பதுக்கி விற்பனை செய்த மூதாட்டி சரோஜாவை (62) கைது செய்து, அவரிடமிருந்த 32 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனர். அதேபோல் அம்மாப்பேட்டை பகுதியில் மது விற்பனை செய்ததாக அப்பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (38), தனசேகரன் (30) ஆகியோரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்த 117 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனர்.