சேலம் மாவட்டத்தில் 89 மி.மீ. மழை பதிவு

: சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 89 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

: சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 89 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக வெள்ளிக்கிழமை இரவு 9 மணியிலிருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை மழை பெய்தது. 
சேலம் மாநகரப் பகுதியில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கிச்சிபாளையம், கொண்டலாம்பட்டி, சூரமங்கலம் என பல இடங்களில் மழை பெய்தது. இதனால் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. வெள்ளிக்கிழமை இரவில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் புறநகர் பகுதியில் ஆத்தூர், ஏற்காடு, எடப்பாடி, சங்ககிரி பகுதியிலும் மழை பெய்தது.
சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: ஆத்தூர்25, சேலம்22, ஏற்காடு17, எடப்பாடி14, சங்ககிரி10 என மாவட்டத்தில் மொத்தம் 89 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
ஓமலூரில்...
ஓமலூர் வட்டாரப் பகுதியில் வீசிய சூறாவளி காற்றுக்கு பத்துக்கும் மேற்பட்ட வீடுகள்நாசமடைந்தன. 
ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதியில் கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக மாலை நேரங்களில் கருமேகம் சூழ்ந்து வானம் காட்சியளித்தது. ஆனால், மழைக்கு முன் இரண்டு நாள்களாக சூறைக்காற்று பலமாக வீசி வருகிறது.
இதில், ஓமலூர் அருகேயுள்ள சக்கரசெட்டிப்பட்டி, காமலாபுரம், தும்பிபாடி உள்ளிட்ட கிராமங்களில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்து நாசமடைந்தன.
இதனால், பொதுமக்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர். சேதமடைந்த வீடுகளை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து, நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்ககிரியில்...
சங்ககிரி வட்டப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் கீழே விழுந்து சேதமடைந்தன.
சங்ககிரி வட்டப் பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், ஏப். 18ஆம் தேதி 8 மில்லி மீட்டர் மழை பெய்தது. அதனையடுத்து, வெள்ளிக்கிழமை (ஏப். 19) இரவு திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
இதில், மகுடஞ்சாவடிக்கு அருகே உள்ள அ.தாழையூர் பகுதியில் ஆயிரம் வாழை மரங்களும், தேவூர் அருகே உள்ள கோணக்கழுத்தானூர், அருமைக்காரர் தோட்டம், ஓடசக்கரை, சின்னாம்பாளையம், அம்மாபாளையம், பெரமச்சிபாளையம், தண்ணிதாசனூர், காவேரிப்பட்டி, கோனேரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்களும் விழுந்து நாசமடைந்தன. சேதமடைந்த வாழை மரங்கள் குறித்து சங்ககிரி வருவாய்த் துறையினரும், வேளாண், தோட்டகலைத் துறையினரும் ஆய்வு செய்து
வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com