எடப்பாடி அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தார்.
எடப்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட ஆடையூர் ஊராட்சி, செம்மண்குளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சென்னியப்பன் (50), விவசாயி. இவர் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் இறந்த தனது உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று இரவு நேரத்தில் வீடு திரும்பியபோது, விவசாயத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் கால் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதன்கிழமை காலை தோட்டத்துக்கு நீர்பாய்ச்ச சென்ற தொழிலாளர்கள் கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதைக் கண்டு, பூலாம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார் மற்றும் எடப்பாடி தீயணைப்புத் துறையினர் சென்னியப்பனின் உடலை மீட்டனர். இதுகுறித்து பூலாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.