தமிழகத்தில் முதல் முறையாக ஜவுளித் தொழில் தொடர்பான சர்வதேச ஜவுளிக் கண்காட்சி ஜனவரி 27 - முதல் 29-ஆம் தேதி வரை கோவையில் நடைபெறவுள்ளதாக சேலம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் துறை துணை இயக்குநர் கி.கிரிதரன் தெரிவித்தார் .
சேலம் அம்மாப்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் சர்வதேச ஜவுளிக் கண்காட்சி முன்னோட்ட ஆயத்தக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
தமிழகத்தில் முதல் முறையாக ஜவுளித் தொழில் தொடர்பான சர்வதேச ஜவுளிக் கண்காட்சி ஜனவரி 27 முதல் 29 வரை கோவையில் நடைபெறுகிறது. இக் கண்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைக்கிறார்.
கோவையில் உள்ள கொடிசியா தொழில் அரங்கத்தில் சர்வதேச ஜவுளிக் கண்காட்சி தமிழக அரசின் சார்பாக நடத்தப்படவுள்ளதால், இக்கண்காட்சியில் சர்வதேச அளவில் ஜவுளித் துறையை சார்ந்த தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர்கள் கலந்து கொள்ள உள்ளதால், இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, சேலம் மாவட்டத்தில் உள்ள ஜவுளித் துறையைச் சார்ந்த தொழில் அதிபர்கள் தங்களது உற்பத்தி பொருள்களை காட்சிப்படுத்துவதன் மூலம் விற்பனைச் சந்தையை கையகப்படுத்தவும், ஜவுளித் தொழிலை சர்வதேச அளவில் விரிவுப்படுத்தவும் முடியும் என்றார்.
இக்கூட்டத்தில் சேலம் பட்டுக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குநர் எஸ்.சண்முகசுந்தரம், சேலம் மாவட்ட நாடா இல்லா விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கே.அழகிரிநாதன், தமிழ்நாடு சிறு விசைத்தறி ஏற்றுமதி ஜவுளி உற்பத்தியாளர்கள் சேவா சங்கத் தலைவர் கே.பி.அப்பு செட்டியார், விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜாபெருமாள், சேலம் மண்டல குமரன் விசைத்தறி நெசவாளர்கள் சங்கத் தலைவர் ஏ.கலைவாணன் மற்றும் ஏராளமான ஜவுளித் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.