சேலம் மத்திய சிறையில் கைதி ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
நாமக்கல் நகரப் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர். இதையடுத்து கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், சனிக்கிழமை காலை கைதி ஸ்ரீராம், கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை சிறைக் காவலர்கள் கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த ஸ்ரீராம் தனது சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து கழுத்தை அறுத்துக் கொண்டு மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறைக் காவலர் உடனே சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு, ஸ்ரீராமை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்று சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். அங்கு மருத்துவர்கள், ஸ்ரீராமுக்கு சிகிச்சை அளிக்க முயற்சித்தனர். ஆனால், சிகிச்சை அளிக்கக் கூடாது என ஸ்ரீராம் கூறியதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து சிறைக் காவலர்கள் மூலம் ஸ்ரீராமுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.