கோயில் திருவிழாவை நடத்துவதில் தகராறு: சாலை மறியல்
சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே கோயில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நங்கவள்ளி சின்னசோரகையில் உள்ளது வேட்றாய பெருமாள் கோயில். ஆண்டுதோறும் தைப் பூசத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். திருவிழா நடத்துவதில் கோவிந்தன், ராமசாமி தரப்பினருக்கும் தங்கவேலு தரப்பினருக்கும் கருத்து வேறுபாடு இருந்தது.
இதனால் கடந்த இரு ஆண்டுகள் இந்து அறநிலையத் துறையே திருவிழாவை நடத்தி வந்தது. இரு தினங்களுக்கு முன்பு இரு தரப்பினரிடமும் சமரசம் ஏற்படுத்த மேட்டூர் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கோவிந்தன் தரப்பினரிடம் உரிய முறையில் விசாரணை நடத்தப்படவில்லை. ஆவணங்களையும் சரிபார்க்கவில்லை எனக் கோரி கோவிந்தன் தரப்பினர் நங்கவள்ளி - தாரமங்கலம் சாலையில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், இரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதன்பிறகு வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினருக்கும் ஒத்த கருத்து ஏற்படும் வரை யாரும் திருவிழா நடத்தக் கூடாது எனக் கூறப்பட்டது. அதன் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.