வாழப்பாடியை அடுத்த குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் மகன் பிரசாந்த் (24). பாக்கு மரத்தில் ஏறி காய்களை அறுவடை செய்து கொடுக்கும் கூலித் தொழிலாளியான இவர், சனிக்கிழமை காலை அதே கிராமத்தில் உள்ள ஜெயராமன் என்பவருக்குச் சொந்தமான பாக்கு மரத்தோப்பில் காய்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்துக்கு தாவியபோது எதிர்பாராத விதமாக நிலைத் தடுமாறிய பிரசாந்த், மரத்திலிருந்து கீழே தவறி விழுந்ததில் படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வாழப்பாடி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.