எடப்பாடி அருகே நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் எட்டரை பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
எடப்பாடி நகராட்சிக்குள்பட்ட கவுண்டம்பட்டி, செல்லாண்டி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ். விசைத்தறித் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி உண்ணாமலை (65). இவர் சனிக்கிழமை காலை, கவுண்டம்பட்டி முச்சந்தி அருகில் உள்ள சின்னமாரியம்மன் கோயில் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், உண்ணாமலையை திடீரென கீழே தள்ளி அவர் கழுத்தில் அணிந்திருந்த எட்டரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உண்ணாமலை அளித்த புகாரின் பேரில் எடப்பாடி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு, நகைப் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை
தேடிவருகின்றனர்.