ஓமலூர் தலைமை அரசு பொது மருத்துவமனையில் தண்ணீரின்றி நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் ஓமலூர், காடையாம்பட்டி ஆகிய இரண்டு தாலுகாக்களின் தலைமை அரசு பொது மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் மற்றும் கருப்பூர் ஆகிய வட்டாரங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிகிச்சை பெறுகின்றனர்.
மேலும், விபத்து, தகராறு, அடிதடி போன்ற பிரச்னைகளில் காயமடைந்தவர்களும், போலீஸ் வழக்கு தொடர்பான பிரச்னைகளுக்கும் இந்த மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானோர் உள் நோயாளியாகவும் சிகிச்சை பெறுகின்றனர். மேலும், பெண்கள், கர்ப்பிணிகள், பிரசவமடைந்த பெண்கள் என பலரும் தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக இந்த மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாட்டால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிப்பதற்கு மட்டுமின்றி கழிவறையிலும் தண்ணீர் இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர். மருத்துவ சிகிச்சை மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், மருத்துவமனையில் உள்ள மின் விசிறிகள் அனைத்தும் பழுதடைந்து செயல்படாமல் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால், மின் விசிறி இல்லாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
எனவே, லாரி மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பழுதான மின் விசிறிகளை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.