பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்ககிரி வட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சங்ககிரி வட்டச் செயலர் டி.செந்தில்குமார் தலைமை வகித்து கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார். நிர்வாகிகள் ஆர்.பழனிசாமி, கே.காவேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.கே.வெங்கடாஜலம், சங்ககிரி வட்டச் செயலர் எஸ்.கே.சேகர், மாதர் சங்க வட்டச் செயலர் என்.ஜெயலட்சுமி, விசைத்தறி சங்க நிர்வாகி ஏ.ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு ஊராட்சிகளிலும் வேலை அட்டை பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தேவையான வேலை தொகுப்பை உருவாக்கி அனுமதி பெற்று, தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை வழங்க மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை அட்டை பெற்றுள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் தேர்தல் கால ஊதியத்தை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். குடிநீர் இல்லாத கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. பின்னர் துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.