சங்ககிரியை அடுத்த ஈரோடு பிரிவு சாலை அருகே தேர்தல் நிலை கண்காணிப்புக் குழு எண்.2 சார்பில் வெள்ளிக்கிழமை இரவு செய்யப்பட்ட வாகன சோதனையில் இரும்புக் கம்பிகளை வாங்கி விற்கும் நிறுவன உரிமையாளரிடமிருந்து ரூ. 1லட்சத்து 38 ஆயிரத்தைப் பறிமுதல் செய்து நாமக்கல் மக்களவை உதவித் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
கூட்டுறவு சார்-பதிவாளர் எஸ்.ஆர்.முரளிகிருஷ்ணன் தலைமையிலான தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் சங்ககிரியை அடுத்த ஈரோடு பிரிவு சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பவானியிலிருந்து சங்ககிரி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் உரிய ஆவணம் இல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து குழுவினர் விசாரணையில், சங்ககிரி அருகே உள்ள சங்ககிரி மேற்கு பள்ளத்தூரில் இரும்புக் கம்பிகளை வாங்கி விற்கும் நிறுவனம் நடத்தி வரும் எட்டியப்பன் மகன் மூர்த்தி (49) என்பதும் தெரியவந்தது. அவரிடம் ரொக்கத்துக்கான உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்து, நாமக்கள் மக்களவைத் தொகுதி உதவித் தேர்தல் அலுவலரும், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியருமான மு.அமிர்தலிங்கத்திடம் ஒப்படைத்தனர். வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கத்துடன் 4 வளையல்கள், இரண்டு சங்கிலிகளை நிலை கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தேர்தல் அலுவலர்கள் பிடிபட்ட பொருள்களை உண்மை தன்மை கண்டறிய நகை பரிசோதகரை வரவழைத்து பரிசோதனை செய்ததில், அவை கவரிங் நகைகள் என்பது தெரியவந்ததையடுத்து, உதவித் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
ஆத்தூரில்...
ஆத்தூர் தேசிய புறவழிச் சாலையில் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது வெள்ளிக்கிழமை உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, ஆத்தூர் தேர்தல் பொறுப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தேசிய புறவழிச் சாலையில் ஆத்தூர் தொகுதி பறக்கும் படையினர் தேர்தல் சம்பந்தமாக வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஆத்தூர் கடம்பூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் செந்தில் (23) என்பவர் உரிய ஆவணமின்றி ரூ. 1லட்சத்தை காரில் கொண்டு சென்றார். அதனை ஆத்தூர் பறக்கும் படை குழுத் தலைவர் பி.வி.வெங்கட்ரமணன் கைப்பற்றி ஆத்தூர் தொகுதி தேர்தல் அலுவலர் ஏ.எஸ்.அபுல் காசிமிடம் ஒப்படைத்தார்.