சேலத்தில் வழிப்பறி, ஆள் கடத்தலில் ஈடுபட்ட நபரை போலீஸார் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
அவினாசி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயமணி. இவர், கடந்த 2018 டிசம்பர் 30-ஆம் தேதி சாலையில் நடந்து சென்றபோது, மேட்டூரைச் சேர்ந்த ரகு, தனது கூட்டாளிகளுடன் ஜெயமணியை காரில் கடத்தி ரூ. 20 லட்சம் பணமும், 10 பவுன் நகையும் கேட்டு மிரட்டியுள்ளார்.
ஜெயமணி பணம் தர மறுக்கவே, அவினாசி பாலம் அருகே ஜெயமணியை இறக்கி விட்டுச் சென்றார். இதுகுறித்து ஜெயமணி, அவினாசி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அவினாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில், ஏற்காடு படகு இல்லம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ரவி என்பவரை வழிமறித்த ரகு, ரூ. 1,000 பணம் பறித்துச் சென்றார். ஏற்காடு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
சாலப்பாறை முனியப்பன் கோயில் பகுதியில் மறைந்திருந்த ரகுவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரகு மீது ஏற்கனவே ரூ.2000, ரூ.500 ஆகிய கள்ள நோட்டுகளை வைத்திருந்த வழக்கில் திருச்செங்கோடு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ரகு ஈடுபட்டு வருவதால், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். தீபா கனிகர் பரிந்துரையின்படி, ரகுவை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்டக் காவல் துறை பரிந்துறையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஆணை பிறப்பித்தார். சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ். தீபா கனிகர் பொறுப்பேற்றது முதல் இதுநாள் வரை தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 8 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.