கெங்கவல்லியில் முட்டை வாங்க வைத்திருந்த இரண்டு லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் வியாழக்கிழமை நள்ளிரவில் பறிமுதல் செய்தனர்.
கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதிக்கான 1ஆவது பறக்கும் படை அலுவலர் குணசேகரன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், வியாழக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு தொகுதிக்குள்பட்ட நத்தக்கரை பகுதியில் வாகன சோதனையில்
ஈடுபட்டிருந்தனர்.
அப்போது விழுப்புரத்திலிருந்து நாமக்கலுக்கு முட்டை வாங்க சென்ற மினி லாரியை சோதனை செய்தனர். அப்போது லாரியில் முட்டை வாங்க வைத்திருந்த இரண்டு லட்சம் ரூபாய்க்கு எந்தவித ஆவணங்களும் இல்லாததால், அந்த தொகை பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட தொகையை கெங்கவல்லி தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சுந்தரமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. அத்தொகை வெள்ளிக்கிழமை கெங்கவல்லியிலுள்ள கருவூலத்தில் செலுத்தப்பட்டது.