ஓமலூர் அருகே இடி மின்னல் தாக்கியதில் தென்னை மரம், குடிசை வீடு, வைக்கோல்போர் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன.
காடையாம்பட்டி அருகே தும்பிபாடி ஊராட்சியில் சரக்கப்பிள்ளையூர் கிராமம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி மனைவி ஜெயமணி. இவர்களுக்கு செல்வகுமார் என்ற மகனும் இரண்டு மகளும் உள்ளனர்.
அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
விவசாயியான இவரது கணவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில், ஜெயமணி விவசாயத் தோட்டத்தில் உள்ள சாலை வீட்டில் வசித்து வருகிறார். மேலும், விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்த நிலையில் புதன்கிழமை இரவு பலத்த காற்றுடன் இடி மின்னல் தாக்கியது. லேசான தூரல் தூறும்போது, கிணறு அருகே உள்ள தென்னை மரத்தடியில் ஜெயமணி இருந்தார்.
அப்போது, பலத்த சத்தத்துடன் இடி மின்னல் தாக்கியது. இந்த இடி மின்னல் தென்னை மரத்தின் மீது விழுந்ததில் அதிர்ச்சியடைந்த ஜெயமணி தூக்கி வீசப்பட்டு மயக்கமடைந்தார். அதைத் தொடர்ந்து தென்னை மரத்தடியில் இருந்த சாலை வீடு மற்றும் அருகே இருந்த வைக்கோல்போர் ஆகியவை மின்னல் தாக்கியதில் தீ பிடித்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதை தொடர்ந்து அதன் அருகில் மயங்கிய நிலையில் இருந்த ஜெயமணியை மீட்டு ஓமலூர் தனியார் மருத்துவமனைக்குகொண்டு வந்து சேர்த்து சிகிச்சை அளித்தனர். இடி மின்னல் தாக்கிய சம்பவத்தில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முறையாக ஆய்வு நடத்தி உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.