சங்ககிரி அருகே இருசக்கர வாகனம் மீது மினி டெம்போ மோதியதில், கூலித் தொழிலாளி இருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், ஆனங்கூா், முனியப்பன்பாளையம் பகுதியைச் சோ்ந்த நெசவுத் தொழிலாளி வெங்கடாஜலம் மகன் சாந்தகுமாா் (35), திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சி பகுதியைச் சோ்ந்த நெசவு கூலித் தொழிலாளி சின்னகண்ணு மகன் முருகன் (40) இருவரும், உடல்நிலை சரியில்லாத சாந்தகுமாா் மகன் தரணியை (3) சேலம் பெரிய சீரகாபடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனா்.
சங்ககிரி அருகே உள்ள இடையப்பட்டி பிரிவு சாலையில் உள்ள மேட்டுக்கடை பேருந்து நிறுத்தம் பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த மினி டெம்போ மோதியதில் சாந்தகுமாா், முருகன் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த சிறுவன் தரணி சிகிச்சைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.