சேலத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு ஆட்சியர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் தர்னாவில் ஈடுபட்டனர்.
சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு மாற்றுத்திறனாளி விடுதலை முன்னணியின் மாநில பொதுச்செயலர் மோகன்ஜீ தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வந்தனர்.
பின்னர் திடீரென ஆட்சியர் அலுவலக நுழைவுவாசலில் தர்னாவில் அமர்ந்தனர்.
இதுகுறித்து அவர்கள்கூறியதாவது:
மாற்றுத்திறனாளிகளாகிய நாங்கள் பல மாதங்களாக வீட்டுமனை பட்டா கேட்டு போராடி வருகிறோம். ரெட்டியூர் கிராமம் கோமாளிக்காடு பகுதியில் தமிழக அரசுக்குச் சொந்தமான இடம் உள்ளது. அந்த நிலத்தை பட்டா போட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தர வேண்டும் எனக் கோரி பலமுறை மனு அளித்தோம்.
ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் வீட்டுமனை பட்டா வேண்டும் என்றால் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று வீடு அற்றோருக்கான சான்றிதழ் பெற்றுத்தர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவ்வாறு அங்கு சென்று சான்றிதழ் கேட்டால் அதிகாரிகள் கையெழுத்து போடாமல் போக்குகாட்டி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.