காவிரியில் கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணைப் பகுதியில், வெள்ளிக்கிழமை பேரிடர் கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணையிலிருந்து கூடுதலான அளவில் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கு காலங்களில், தண்ணீரில் சிக்கிய நபர்களை மீட்பது குறித்தும், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தல் குறித்தும், எடப்பாடி தீயணைப்புத் துறை சார்பில் நேரிடை செய்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையில் பூலாம்பட்டி காவிரி கதவணை நீர்த்தேக்கப் பகுதியில் நடைபெற்ற மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியை எடப்பாடி வட்டாட்சியர் கோவிந்தராஜன் தொடக்கிவைத்தார். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் சிக்கிய நபர்களை மீட்கும் பல்வேறு வழிமுறைகளை செய்துகாட்டினர்.