தினமணி மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் சார்பில் சேலம் திரிவேணி கார் நிறுவனத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
சேலம் சூரமங்கலத்தில் உள்ள திரிவேணி கார் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திரிவேணி குழுமங்களின் தலைவர் பி. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். அப்போது வாக்காளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வைக்கப்பட்டிருந்த பேனரில் அவர் கையெழுத்திட்டார். இதுதொடர்பாக அவர் கூறியது:
ஜனநாயகத்தில் நமக்குக் கிடைத்திருக்கிற மிகப் பெரிய உரிமை வாக்குரிமையாகும். இந்த வாக்குரிமையை கட்டாயமாகப் பயன்படுத்திட வேண்டும்.
மக்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்திட ஒவ்வோர் இந்தியக் குடிமகனும் தனது வாக்குரிமையை உறுதி செய்திட வேண்டும். வரும் ஏப்.18 ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவின் போது எந்தவொரு பணியாக இருந்தாலும், வாக்களித்திட உறுதி ஏற்றிட வேண்டும் என்றார்.
திரிவேணி கார் நிறுவன ஊழியர்கள் சுமார் 400 பேர் பங்கேற்று கையெழுத்திட்டனர். மேலும், கார் விற்பனையகத்துக்கு வந்திருந்த வாடிக்கையாளர்களும் ஆர்வமாகப் பங்கேற்று கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சியில், திரிவேணி கார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ராஜ்குமார், நிறுவன இயக்குநர் எம். சுரேஷ்குமார், தினமணி தருமபுரி பதிப்பு மேலாளர் டி. கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.