எட்டுவழி சாலைத் திட்டம் குறித்து மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர் அலி கேட்டுக் கொண்டார்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
மத்திய பாஜக அரசு ரஃபேல் விமானக் கொள்முதலில் ஊழல் செய்திருக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் ஊழல் செய்திருக்கிறது.
சேலம் - சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டம் குறித்த அறிவிக்கையை நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், இத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது நிலைப்பாட்டை விளக்கிட வேண்டும் என்றார் அவர்.