வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், சீரான குடிநீர் விநியோகிக்கக் கோரி, வாழப்பாடி பேரூராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
புதுப்பாளையம் கிராமத்துக்குக் கடந்த ஒரு மாதமாக சீரான குடிநீர் விநியோகிக்கவில்லை.
இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். எனவே குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணவும், தட்டுப்பாடின்றி வாரத்துக்கு ஒருமுறை சீரான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரியும், காலி குடங்களுடன் 50-க்கும் மேற்பட்ட பெண்கள், திங்கள்கிழமை வாழப்பாடி பேரூராட்சி அலுவலகத்துக்குத் திரண்டு சென்று முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளர் சுப்ரமணியன் தலைமையிலான வாழப்பாடி போலீஸார் பேரூராட்சி அலுவலகத்துக்குச் சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீஸாரும், பேரூராட்சி நிர்வாகத்தினரும் புதுப்பாளையம் கிராமத்துக்கு சீரான குடிநீர் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்துப் போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.