ஏற்காட்டில் அரசு சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் குறித்து சுற்றுலாப் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
ஏற்காடு ஒண்டிக்கடை சுற்றுலாப் பகுதியில் தமிழக அரசு கடந்தாண்டு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் நலன்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்து, ஒரு லிட்டர் ரூ.1-க்கு குடிநீர் வழங்கி வருகிறது. இந்த நிலையில், இங்கு தனியார் கடைகளில் நாள்தோறும் இருநூறு லிட்டர் மற்றும் விடுமுறை நாள்களில் ஐநூறு லிட்டருக்கும் மேல் குடிநீர் விற்பனையாவதாக குடிநீர் நிலையப் பணியாளர் தெரிவித்தார்.
ஏற்காடு சுற்றுலாப் பகுதியில் தனியார் நிறுவன குடிநீர் குப்பிகள் விற்பனை அதிகளவில் உள்ள நிலையில், அரசு சுத்திகரிப்பு குடிநீர் நிலையத்தில் குடிநீர் வாங்க வருவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளதற்கு போதுமான விளம்பரங்கள், விழிப்புணர்வு இல்லாததே காரணம் எனக் கூறப்படுகிறது.
மேலும், குடிநீர் வாங்க வரும் சுற்றுலாப் பயணிகள் குப்பிகள் இல்லாமல் வருவதால், குடிநீர் வாங்கிச் செல்வதில் ஆர்வம்காட்டவில்லை என தெரிவிக்கின்றனர். மேலும், மின்தடை ஏற்படும் போது குடிநீர் சுத்திகரிப்பில் தடை ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே, இந்த அரசு சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் குறித்த விளம்பரம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடப்பட்டுள்ளது.