ஓமலூர் அருகே தேங்காய் நார் கயிறு திரிக்கும் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓமலூர் அருகேயுள்ள திமிரிகோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகராஜன், அதே பகுதியில் கயிறு திரிக்கும் தொழில் செய்து வருகிறார். அதற்கான தொழிற்சாலையில் தேங்காய் நார் உற்பத்தி மற்றும் தேங்காய் நார் கயிறு உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.
இந்த நிலையில், தேங்காய் மட்டையில் இருந்து நார் எடுத்த பின்னர் வரும் நார் கழிவு, தொழிற்சாலை அருகே மலை போல் குவிக்கப்பட்டிருந்தது. அந்த நார் கழிவில் திடீரென தீப் பிடித்து எரியத் தொடங்கியது.
தகவலின் பேரில் விரைந்து வந்த ஓமலூர் தீயணைப்பு வீரர்கள் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாக இருந்த சுமார் ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான விவசாய நார் கழிவு தீயில் கருகி வீணாகியது. மேலும், நார் உற்பத்தி உபகரணங்களும் எரிந்து சேதமடைந்தன.
தொழில் போட்டி காரணமாக மர்ம நபர்கள் தீ வைத்து விட்டார்களா அல்லது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து தீவட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.