சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் 73ஆவது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி வைத்து பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.
நாட்டின் 73ஆவது சுதந்திர தினவிழா வியாழக்கிழமை (ஆக.15)கொண்டாடப்படு கிறது. சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் காந்தி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா நடைபெறுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் கலந்து கொண்டு காலை 9.05 மணிக்கு தேசிய கொடியை ஏற்றிவைக்கிறார்.
இதையடுத்து காவல்துறை சார்பில் நடைபெறும் ஆயுதப் படை போலீஸாரின் அணிவகுப் மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இதைத்தொடர்ந்து சுதந்திரப்போராட்ட தியாகிகளை கௌரவித்து நினைவுப்பரிசு வழங்கப்பட உள்ளது.
சேலம் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றி வரும் போலீஸார், மருத்துவர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் நற்சான்றிதழ்களை வழங்குகிறார். பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில்பயாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும்
வகையில் விளையாட்டு மைதானம் முழுவதும் மாநகர போலீஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் கருவியின் மூலம் சோதனையிட்ட பின்னரே பொதுமக்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதேபோல சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் விழாவில், மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார். ரயில்வே கோட்ட அலுவலகத்தில் கோட்ட மேலாளர் சுப்பாராவ், சேலம் மத்திய சிறையில் கண்காணிப்பாளர் தமிழ்ச் செல்வன், அரசு மருத்துவ மனையில் தலைவர் கே.திருமால் பாபு ஆகியோர் தேசிய கொடியேற்றுகின்றனர்.
சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற் றும் தனியார் பள்ளி, கல்லூரி களில் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன.