சேலத்தில் ஏழு அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டு ஏற்காடு மலை அடிவார வனப் பகுதியில் விட்டனர்.
சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் போது சேலம் அருகே உள்ள காரைக்காடு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ஏழு அடி நீளமுள்ள மலைப்பாம்பு மழை நீரில் அடித்து வரப்பட்டது. இதை வனக்குழுத் தலைவர் மாணிக்கம் பார்த்து, உடனே சேலம் மாவட்ட வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தெற்கு வனச்சரகர் பரசுராமமூர்த்தி மற்றும் வனவர் மோகன், வனக்காப்பாளர் மாதையன், பாம்பு பிடிக்கும் ஊழியர் லாரா ஆகியோர் காரைக்காடு பகுதிக்குச் சென்றனர். பின்னர், அந்த ஏழு அடி நீளமுள்ள மலைப் பாம்பை ஊழியர் லாரா பிடித்தார். இதையடுத்து மலைப்பாம்பு அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள வனச்சரக அலுவலகத்துக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் மலைப்பாம்பை ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவையொட்டிய வனப்பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டனர்.