ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்துக்கு தாலுகா செயலாளர் ஏ.முருகேசன் தலைமை வகித்தார். ஆத்தூர் தாலுகாவில் உள்ள கல்லுக்கட்டு, வானாபுரம் மாணவ, மாணவியர் சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்து 6 மாதங்களாகியும் வழங்கப்படாததைக் கண்டித்தும், ராமமூர்த்தி நகர், பட்டுத்துறை பகுதியில் குடிமனைப் பட்டா இருந்தும் வருவாய்த்துறை கணக்கில் ஏற்றாததைக் கண்டித்தும், வளையமாதேவி, வசந்தபுரம் பகுதிக்கு வீட்டுமனைப் பட்டா, காந்திபுரம், கல்லுக்கட்டு, மேல்தொம்பை பகுதி மலைவாழ் மக்கள் அனுபவித்து வரும் நிலத்துக்கு பட்டா வழங்கக் கோரியும் காத்திருப்புப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதில் மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தி, இல.கலைமணி, ஏ.தர்மலிங்கம், எம்.சடையன், வி.செல்வமேரி, தங்கம்மாள், முனியம்மாள், பொன்னுசாமி, கே.பெரியண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.