வாழப்பாடி அருகே குமாரசாமியூர் கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், தொழிலாளர்கள் சீரமைத்த மழைநீர் சேகரிப்பு குட்டை, ஒரே மாதத்தில் இருமுறை நிரம்பியதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், அத்தனூர்பட்டி ஊராட்சிக்கு உள்பட்டது குமாரசாமியூர் கிராமம். கடந்த இரு ஆண்டுகளாக பருவமழை பொய்த்து கடும் வறட்சி நிலவியதால், நிலத்தடி நீர் மட்டம் அடியோடு சரிந்தது. குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
எனவே, இந்தக் கிராமத்தில் மழைநீரைச் சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், கடந்த 2010-2011 ஆம் ஆண்டில் கசிவு நீர் குட்டை அமைக்கப்பட்டது.
தூர்ந்து போன நிலையில் பராமரிப்பின்றி, புதர்மண்டிக் காணப்பட்ட இக்குட்டையைத் தூர்வாரி புதுப்பிக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், இந்த கசிவுநீர் குட்டை தொழிலாளர்களால் தூர்வாரி புதுப்பிக்கப்பட்டது. இதுமட்டுமன்றி, சுற்றுப்புறப்பகுதியில் இருந்து மழை நீர் வழிந்தோடி வருவதற்கு வருகால் வாய்க்காலும், குட்டை நிரம்பி வழிந்தால் உபரிநீர் வழிந்தோடி செல்வதற்கு, மறுகால் வாய்க்காலும் தொழிலாளர்களால் தூர்வாரி சீரமைக்கப்பட்டது.
இந் நிலையில் வாழப்பாடி பகுதியில் ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், தொழிலாளர்களால் தூர்வாரி புதுப்பிக்கப்பட்ட குமாரசாமியூர் மழைநீர் சேகரிப்பு குட்டை, ஒரே மாதத்தில் இருமுறை நிரம்பியுள்ளது. கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.