கெங்கவல்லி அருகே முதியவரை கொலை செய்த லாரி ஓட்டுநருக்கு ஆயுள்தண்டனை விதித்து சேலம் முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள வலசக்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் (45), லாரி ஓட்டுநராகவேலைபார்த்து வந்தார். இவரது மனைவி சித்ரா (35). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும்
உள்ளனர். இந்நிலையில் சித்ராவுடன், அவரது தாயார் முத்தம்மாளும் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2014 ஜனவரி மாதம் முத்தம்மாளுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனைக்கு செல்வதாகவும், தனது மகள் தனியாக இருப்பதால் அவரை பார்த்துக்கொள்ளும்படியும் அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமியிடம் (65) கூறிவிட்டு சென்றார். இதையடுத்து, ராஜகோபால் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புகையில், வீட்டில் பெரியசாமி இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜகோபால், பெரியசாமியை உருட்டுக்கட்டையால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த பெரியசாமி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பான புகாரின் பேரில், கெங்கவல்லி போலீஸார் வழக்குப் பதிந்து ராஜகோபாலை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதி குமரகுரு, ராஜகோபாலுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.