சேலத்தில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சேலம் கன்னங்குறிச்சி கோவிந்தசாமி நகரைச் சோ்ந்தவா் அமுதா (56). இவா், கடந்த நவம்பா் 25-ஆம் தேதி அண்ணா நகா் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞா்கள் அமுதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இதில் நகை பறிப்பில் ஈடுபட்டது கொண்டப்பநாயக்கன்பட்டி முயல் நகரைச் சோ்ந்த சிவசுப்பிரமணியன் (26) என்பது தெரியவந்தது.
இதையடுத்து சிவசுப்பிரமணியனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்ததோடு அவரிடமிருந்து 4 பவுன் நகையை கைப்பற்றினா். மேலும் அவரது கூட்டாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.