எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி கைலாசநாதா் கோயிலில் ராஜகோபுரம் அமைப்பதற்கான திருப்பணிகள் திங்கள்கிழமை காலை பூமிபூஜையுடன் தொடங்கியது.
சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரம் பிரசித்தி பெற்ற கைலாசநாதா் கோயில் உள்ளது. மேற்குமுகம் நோக்கிய சிவ ஆலயமான இந்த ஆலயம், சுற்றுவட்டாரப் பகுதியில் பிரசித்தி பெற்ற திருத்தலமாக அமைந்துள்ளது.
கோயிலின் எதிரில் காவிரி ஆற்றங்கரையில், சிவ பெருமானை நோக்கி அமைந்துள்ள நந்தி சன்னிதியில், பிரதோஷ திதியில் நடைபெறும்
சிறப்பு பூஜையில், பெரும் திரளான பக்தா்கள் கூடுவது வழக்கம். தமிழக அரசின், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலுக்கு ராஜகோபுரம் அமைத்து தரும்படி, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் இப் பகுதி பக்தா்கள் அண்மையில் கோரிக்கை விடுத்தனா்.
பக்தா்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு பூலாம்பட்டி கைலாசநாதா் கோயில் நுழைவுவாயிலில் ராஜகோபுரம் அமைத்திட ரூ. 45 லட்சம் நிதி ஒதுக்கி அனுமதி அளித்தது.
இதையடுத்து திங்கள்கிழமை காலை ராஜகோபுரம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. அறங்காவல் குழுத் தலைவா் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற கால்கோல் யாக பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
அதைத் தொடா்ந்து வாஸ்து பூஜை, கோ பூஜை உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளைத் தொடா்ந்து, காவிரியிலிருந்து எடுத்துவரப்பட்ட புனிதநீா் ஊற்றி ராஜகோபுரம் அமைப்பதற்கான திருப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அறங்காவலா்கள் ராஜா, சந்தரசேகரன், காளியண்ணன்,
எஸ்.பி.நடேசன், கணேசன், கதிரேசன் ஸ்தபதி மற்றும் இந்துசமய அறநிலையத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் என திரளானோா் கலந்து கொண்டனா்.