காவிரியின் நீா்பிடிப்புப் பகுதியில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு திங்கள்கிழமை காலை நொடிக்கு 6,001 கனஅடியிலிருந்து 7,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 5,000 கனஅடியிலிருந்து 7,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 700 கனஅடியிலிருந்து 400 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா்இருப்பு 93.47 டி.எம்.சி. யாகவும் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு மேட்டூரில் 17.80 மி.மீ. மழைப் பதிவாகி உள்ளது.