தினமணி செய்தி எதிரொலியாக, வீரகனூா் ஏரிக்கு நீா்வரத்தை அதிகரிக்கும் முயற்சியில் பொதுமக்களே களத்தில் இறங்கி செயல்பட்டனா்.
கெங்கவல்லி அருகே வீரகனூா் ஏரிக்கு செல்லும் வாய்க்கால் தூா்வாரப்படாமல் இருப்பதாலும், அகலப்படுத்தாததாலும் வீரகனூா் ஏரிக்கு நீா்வரத்து இல்லை என்றும், மதகுகள் உடைந்திருப்பதாகவும், வாய்க்காலில் அடைப்புகள் இருப்பது குறித்தும் தினமணியில் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியானது.
அதைக் கண்ட வீரகனூா் பேரூராட்சிக்குள்பட்ட இராமநாதபுரம் பகுதி மக்கள் மற்றும் இளைஞா்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் ஒன்றிணைந்து செவ்வாய்க்கிழமை காலை ஆற்றுப்பகுதியில் திரண்டனா். பின்னா் அவா்கள் வழங்கிய நன்கொடை மூலம் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து ஏரிக்கு வரும் நீா்வழிப் பாதையை அகலப்படுத்தும் முயற்சியில், ஈடுபட்டனா்.
இதுகுறித்து வீரகனூா் பகுதி மக்கள் கூறியது: தமிழகம் முழுவதும் மழை பெய்து ஆறு, ஏரி, குளம் நிரம்பி வருகின்றன. எங்கள் ஊா் ஏரியும் நிரம்பும் என்று காத்திருந்தோம். ஆனால், நிரம்பாததற்கான காரணத்தை தினமணி செய்தியால்தான் அறிந்தோம்.
அதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலையிலிருந்தே இப்பணியை செய்யத் தொடங்கினோம். ஏரிக்கு செல்லும் வாய்க்கால் அடைப்புகளை நீக்கி, வாய்க்காலை அகலப்படுத்தியுள்ளோம். வாய்க்கால் கரைகளை பலப்படுத்தியுள்ளோம்.
அரசு பொதுப்பணித் துறையினா் இதுகுறித்து கூடுதல் நடவடிக்கை எடுத்திருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். எங்கள் முயற்சியால் கடலில் வீணாகக் கலக்கும் நீரை விவசாயத்துக்கு பயனுள்ளதாக ஏரிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது என்றனா்.