எடப்பாடி அருகே கூரை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டிலிருந்த ரூ.10 லட்சம் மற்றும் தங்க நகைகள் எரிந்து சேதமடைந்தன.
எடப்பாடி நகராட்சிக்குள்பட்ட மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தகவுண்டர் மகன் ஆண்டியப்பன் (44), தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் மேட்டூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகில் சொந்த கூரை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை ஆண்டியப்பன் குடியிருந்த பகுதியில் காற்று பலமாக வீசியதாக கூறப்படுகிறது. அப்போது, ஆண்டியப்பன் வீட்டின் மீது சென்ற மின்கம்பிகள் மரக்கிளைகளில் உரசியதில் வீட்டின் மீது தீப்பொறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் தீப்பிடித்த வீடு, காற்று பலமாக வீசியதால் கொழுந்துவிட்டு எரிந்தனவாம். தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த எடப்பாடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கப் போராடியும் வீடு முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது. இதில் சுமார் ரூ.10 லட்சம் மற்றும் தங்க நகைகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. எடப்பாடி வருவாய்த் துறை அலுவலர்கள் அப்பகுதியில் முகாமிட்டு சேத விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.