பன்முகத் தேவைக்கேற்ப இந்திய உயர்கல்வியின் தரப்படுத்தல் மேம்படுத்தப்படுகிறது: "நாக்'  இணை ஆலோசகர் தேவேந்திர கெளடா

மாறி வரும் உயர்கல்விச் சூழல், தொழில்நுட்பம், கற்றல்-கற்பித்தல் தேவைகளுக்கேற்ப இந்திய உயர்கல்வி வழங்கும்

மாறி வரும் உயர்கல்விச் சூழல், தொழில்நுட்பம், கற்றல்-கற்பித்தல் தேவைகளுக்கேற்ப இந்திய உயர்கல்வி வழங்கும் நிறுவனங்களின் தரப்படுத்தும் அளவீடுகள் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு பன்னாட்டுத் தரம் உறுதி செய்யப்படுகிறது என "நாக்' அமைப்பின் இணை ஆலோசகர் தேவேந்திர கெளடா தெரிவித்தார்.
பெரியார் பல்கலைக்கழக உள்தர மதிப்பீட்டு உறுதிப்பாட்டு மையம் சார்பில், தேசிய அளவில் பல்கலைக்கழக தரப்படுத்துதல் மற்றும் தேசிய தர நிர்ணயக்குழு அங்கீகாரம் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப்பயிலரங்கில், தேசியத் தரமதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழுவின் (நாக்) இணை ஆலோசகர் தேவேந்திர கெளடா உயர்கல்வி நிறுவனங்கள் தர மதிப்பீடு பெறுவதன் அவசியம் குறித்து பேசினார். அவர் தனது உரையில், உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி, கட்டமைப்பு, ஆய்வகத்தின் தரம், கற்றல்-கற்பித்தல் மற்றும் ஆய்வுச் சூழலை மேம்படுத்துவது, தேசிய வளர்ச்சிக்கு உயர்கல்வியின் பங்களிப்பை உறுதி செய்வது, மாணவர்களிடம் மதிப்பீடுகளை வளர்த்தல், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றை அளவீடுகளாகக் கொண்டு, இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் தரப்படுத்தப்படுகின்றன.
உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள், தேவைகள், தனியார் பங்களிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, உயர்கல்வி நிறுவனங்களின்  தரப்படுத்தல் உறுதி செய்யப்படுகிறது.
எனவே, இந்தியாவில் உள்ள உயர்கல்வி வழங்கும் நிறுவனங்கள் தங்களைத் தரமதிப்பீட்டு அளவீட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றிய பெரியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் பொ.குழந்தைவேல், உயர்கல்வி வழங்கும் ஒவ்வொரு நிறுவனமும் தேசியத் தரவரிசைப் பட்டியல் மற்றும் தேசிய தரமதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழுவின் புள்ளிகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான தர வரிசையில் இடம்பெற்றால் மட்டும் மத்திய நிதிநல்கை குழுக்களிடமிருந்து ஆய்வுத் திட்டங்களுக்குத் தேவையான நிதியை பெற முடியும். எனவே, பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைவுப் பெற்ற கல்லூரிகள் அனைத்தும் "நாக்'  உள்ளிட்ட தரவரிசையில் பட்டியலில் இடம்பெற விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியர் எம்.செந்தில், உயர்கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் இடம்பெற்றால் மட்டுமே நாட்டின் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து கூட்டாய்வுகளை மேற்கொள்ள முடியும். எனவே, உலகளவில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களுடன் நேரடியாக ஆய்வுகளை முன்னெடுக்க இந்த தரவரிசைப் பட்டியல் உதவியாக இருக்கும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், பெரியார் பல்கலைக்கழக உள்தர மதிப்பீட்டு மற்றும் உறுதிப்பாட்டு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் ஆர்.வெங்கடாசலபதி வரவேற்றார். தேசிய தரவரிசைப் பட்டியல் பணி ஒருங்கிணைப்பாளர் ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் ஆர்.பாலகுருநாதன் நன்றி கூறினார். பயிலரங்கில் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இணைவுப்பெற்ற கல்லூரிகளின் தேசிய தரவரிசைப் பட்டியல் பணிகளுக்கான  ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com