ஆத்தூரில் பெரியார் சிலையை அமைக்க மாற்று இடத்தை அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை தேர்வு செய்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் பேருந்து நிலையம் அருகில் கடந்த 1981 செப். 17-ஆம் தேதி பெரியார் சிலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த சிலையால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் கருதி வந்த நிலையில், சமூக ஆர்வலர் செல்வராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 3 வார காலத்துக்குள் பெரியார் சிலையை மாற்றி அமைக்க சேலம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதனையடுத்து, நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப்பொறியாளர் ராதாகிருஷ்ணன், ஆத்தூர் வட்டாட்சியர் செல்வம், ஆத்தூர் நகராட்சி ஆணையர் சரஸ்வதி, உதவி பொறியாளர் கவிதா, நகரமைப்பு அலுவலர் வி.முருகன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் டி.வானவில், அண்ணாதுரை,விடுதலைச் சந்திரன் ஆகியோர் ஆட்சியரின் உத்தரவு படி, தற்போது உள்ள இடத்தில் இருந்து சற்று பின்னால் தள்ளி சிலை வைக்க இடத்தை தேர்வு செய்துள்ளனர்.