ஆத்தூரில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை ஆத்தூர் காவல் ஆய்வாளர் என்.கேசவன் போக்ஸோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் தெற்கு உடையார்பாளையம் அன்னை தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் நடராஜன் (76). இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக 20-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளனவாம். அவற்றை அவர் வாடகைக்கு விட்டுள்ள நிலையில், ஒரு வீட்டில் தந்தையை இழந்த பிளஸ் 2 மாணவி தனது சித்தியுடன் குடியிருந்து வருகிறாராம்.
இந் நிலையில், நடராஜனின் வீட்டுக்கு வீட்டு வேலை செய்வதற்காக செல்லும் அம் மாணவிக்கு, அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து மாணவி தனது சித்தியிடம் கூறவே, அவர் நடராஜனிடம் விசாரித்தாராம். அப்போது அவர்களை நடராஜன் மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து, ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் என்.கேவசனிடம் அந்த மாணவியின் சித்தி புகார் தெரிவித்ததையடுத்து, நடராஜனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீஸார் விசாரித்தனர். தொடர்ந்து, நடராஜனை ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.