பேருந்து மோதி லாரி ஓட்டுநர் உயிரிழப்பு: சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

உயிரிழந்த லாரி ஓட்டுநரின் சடலத்தை வாங்க மறுத்து, சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு உறவினர்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த லாரி ஓட்டுநரின் சடலத்தை வாங்க மறுத்து, சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு உறவினர்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் கருப்பூர் பரவைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜு (56). லாரி ஓட்டுநர். இவரது மனைவி மாதவி. இவர் கடந்த ஜனவரி 8ஆம் தேதி இரவு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு தனது மனைவியுடன் சென்றிருந்தார். இந்நிலையில், தருமபுரி-தொப்பூர் சுங்கச்சாவடியில் தேனீர் அருந்துவதற்காக சாலையைக் கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக ராஜு மீது சொகுசுப் பேருந்து ஒன்று  மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் பலத்த காயமுற்ற ராஜு , தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட ராஜு, சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
இதையடுத்து ஆட்சியர் அலுவலகம் முன்பு ராஜுவின் மனைவி மற்றும் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். காவல் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கும் வரை சடலத்தை  வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு  பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களை மனு அளிக்க அனுமதித்தனர். கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com