சேலத்தில் 25 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
சேலம் மாவட்டத்தில் விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கை, கால் பாதிக்கப்பட்ட, காதுகேளாத 25 மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பேசியது:
18 வயது முதல் 45 வரையுள்ள கை, கால் பாதிக்கப்பட்டுள்ள, காதுகேளாத, வாய்பேசாத மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டுவதற்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பம் செய்திருந்த மாற்றுத் திறனாளிகளிடையே தேர்வுக்குழுவால் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது.
கல்வித்தகுதி இல்லை என்றாலும் தையல் தெரிந்தாலே போதும், வருமானவரம்பில்லை என்ற அடிப்படையில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தையல் இயந்திரத்தில் தைப்பதற்கான பரிசோதனை நடத்தப்பட்டது.
மருத்துவ அலுவலர், தையல் ஆசிரியர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கொண்ட தேர்வுகுழுவின் முன் ஆஜராக மாற்றுத் திறனாளிகள் அழைக்கப்பட்டனர். வருகை புரிந்த மாற்றுத் திறனாளிகளில் தேர்வு செய்யப்பட்ட 105 மாற்றுத்திறனாளிகளில் 25 மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன என்றார்.
நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் க.சுப்ரமணி, மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் உதயக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.