எடப்பாடியை அடுத்த வெண்டனூர் அரசுப் பள்ளி மாணவர்கள் வெள்ளிக்கிழமை களப்பயணம் மேற்கொண்டனர்.
பள்ளி மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் எடப்பாடி அடுத்த வெண்டனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்கள், சங்ககிரி அருகே உள்ள சின்னகவுண்டனூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கும், அங்கு பயிலும் மாணவர்கள் வெண்டனூர் நடுநிலைப் பள்ளிக்கும் இடம் பெயர்ந்து கல்வி பயிலும் நிகழ்வு கடந்த 1 மாதமாக நடைபெற்று வருகிறது.
இரு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள், மாணவிகள் எடப்பாடி பகுதியில் உள்ள சூரிய மின் உற்பத்தி தொழிற்சாலைக்கு களப் பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சூரிய ஒளியிலிருந்து மின் உற்பத்தி செய்யப்படும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் தலைமை ஆசியரியர் நா.கார்த்திகேயன், ஆசிரியைகள் வசந்தி, பிரபா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.