பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம் புதிய பேருந்து நிலையத்தின் வெளிப் பகுதியில் 17 புதிய கண்காணிப்பு கேமராக்களை மாநகரக் காவல் ஆணையர் கே.சங்கர் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிக போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய பேருந்து நிலைய பகுதி அருகே உள்ள குப்பைக் கிடங்கை சுத்தம் செய்து, பொங்கலுக்கு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டுள்ளது.
இதனிடையே புதிய பேருந்து நிலையத்தின் வெளிப் பகுதியில் 17 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், 17 ஒலி பெருக்கி சாதனங்களும் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர கொண்டலாம்பட்டி சந்திப்பில் தானியங்கி சிக்னல், 7 சிசிடிவி கேமராக்கள் மற்றும் 7 ஒலி பெருக்கிகளையும் மாநகரக் காவல் ஆணையர் கே.சங்கர் தொடக்கிவைத்தார்.இதுதொடர்பாக மாநகரக் காவல் ஆணையர் கே.சங்கர் கூறியது: சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு வெளியே நிறுவப்பட்டுள்ள 17 கேமராக்களுடன் பேருந்து நிலையத்தில் ஏற்கெனவே உள்ள 13 கேமராக்களையும் சேர்த்து மொத்தம் 30 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலம் புதிய பேருந்து நிலையம் மற்றும் அருகாமையில் உள்ள இடங்களில் போக்குவரத்து நெரிசல், குற்றவாளிகளின் நடமாட்டம் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டுப்பாடு அறையில் இருந்து கண்காணிக்கப்படும். சேலம் மாநகரம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா நிறுவப்பட்டு குற்ற நபர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, குற்ற நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் பழைய குற்றவாளிகள், தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர், வெளிமாவட்டங்களில் இருந்து சேலத்துக்கு வர வாய்ப்பிருப்பதால் அவர்களை கண்காணிக்கவும், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், பிடியாணை நிலுவையில் உள்ள குற்றவாளிகள் ஆகியோரின் நடமாட்டம் குறித்து தனிப்படை அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.