சேலம் மாவட்டத்தில் வரும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சேலம் மாவட்டத்தில் வருகிற ஜனவரி 25 ஆம் தேதி காலை 10 மணி அளவில் நேரு கலையரங்கத்தில் தேசிய வாக்காளர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 2011-ஆம் ஆண்டு முதல் தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட நாளான ஜனவரி 25ஆம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக நாடு முழுவதும் கொண்டாட தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும், வரும் ஜனவரி 25 ஆம் தேதி 9-ஆவது தேசிய வாக்காளர் தினத்தை நோ வோட்டர்ஸ் டூ பி லெஃப்ட் பிகைண்ட் என்னும் கருப்பொருளுடன் கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.