சங்ககிரி உட்கோட்ட கலால் துறை சார்பில் மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வுப் பேரணியை சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) வேடியப்பன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, பழைய, புதிய எடப்பாடி சாலைகளின் வழியாகச் சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது. இதில் கோட்ட கலால் அலுவலர் கோ.பாலகிருஷ்ணன், வட்டாட்சியர் சி.ரவிச்சந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் சிவராஜ், வருவாய் ஆய்வாளர்கள் கவிதா, ராஜாராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.