மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம், பட்டிமன்றம் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டம், ஆட்டையாம்பட்டியில் அண்மையில் நடைபெற்றது.
ஆட்டையாம்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் கே. முருகபிரகாஷ் தலைமை வகித்தார். தாமரைச்செல்வன் வரவேற்றார். வீரபாண்டி ஒன்றியச் செயலாளர் வெண்ணிலா சேகர், பாரப்பட்டி சுரேஷ்குமார், மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் வீரபாண்டி ஆ. ராஜா நிகழ்ச்சியைத் துவக்கி வைத்துப் பேசினார்.
இதையடுத்து சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ். ஆர். பார்த்திபன் பேசியதாவது:
மேட்டூரிலிருந்து உபரி நீர் பனமரத்துப்பட்டிக்குக் கொண்டு வரும் திட்டமானது கடந்த 2011-ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் திட்டம் வரையறுக்கப்பட்டது. இதை ஆளுங்கட்சியினர் இதுவரைக் கண்டு கொள்ளவில்லை. தற்சமயம் மத்திய அரசிடம் இதற்கான நிதியை பெற்று இந்தத் திட்டம் நடைமுறைபடுத்தப்படும். இத் திட்டம் வெற்றி பெறும்பட்சத்தில் வீரபாண்டி, பாப்பாரப்பட்டி ,எஸ். பாலம், பைரோஜி, பனமரத்துப்பட்டி போன்ற பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் வற்றாத நீர் கிடைக்கும்.
மேட்டூர் முழுமையாக தூர்வாரப்பட்டு இருந்தால் குறைந்தபட்சம் 15 டிஎம்சி வரை தண்ணீர் வரும் காலத்தில் தேக்கி வைத்திருக்கலாம்.
விழாவுக்கு கலைமணி, மோகனவேல், மாணிக்கராஜ், ரத்தினவேல், மகேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் வீரபாண்டி ஆ. ராஜா பேசினார். அருகில் சேலம் எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன், வீரபாண்டி ஒன்றியச் செயலாளர் வெண்ணிலா சேகர் உள்ளிட்டோர் உள்ளனர்.