சேலம் சரக டி.ஐ.ஜி-யாக பிரதீப்குமார் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
சேலம் சரக டி.ஐ.ஜி-யாகப் பொறுப்பு வகித்து வந்த டி. செந்தில்குமார், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சேலம் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மதுரை சரக டி.ஐ.ஜி.யாகப் பொறுப்பு வகித்து வந்த பிரதீப்குமார், சேலம் சரக டி.ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டார். அவர் திங்கள்கிழமை காலை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் டி.ஐ.ஜி. பிரதீப்குமார் செய்தியாளர்களிடம் கூறியது:
சேலம் சரகத்தில் உள்ள சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட நான்கு மாவட்ட எஸ்.பி.களுக்கும் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை வழங்கி வழிநடத்துவேன்.
அதேபோல சேலம் சரகத்தில் ரௌடிகளின் செயல்பாடு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சாலை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கி உயிரிழப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இருசக்கர வாகனம் ஓட்டுவோர்கள் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும். அதேபோல காரில் செல்வோர் சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும். இதுதொடர்பாக முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சேலம் மாவட்ட எஸ்.பி. தீபா கனிகர், கூடுதல் எஸ்.பி. சுரேஷ்குமார், டி.எஸ்.பி.-க்கள் சூரியமூர்த்தி, சங்கர நாராயணன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.