தமிழகத்தில் பட்டியலில் இடம்பெறாத 68 சாதியினருக்கு, பட்டியலில் இடம்பெறாத பழங்குடியென சாதிச்சான்றிதழ் வழங்கக் கோரி, வீரபோயர் இளைஞர் பேரவை சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
வீரபோயர் இளைஞர் பேரவை சேலம் மாவட்ட அமைப்பாளர் ஏத்தாப்பூர் ராஜா, கிழக்கு மாவட்டச் செயலர் குருமணிகண்டன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், தமிழகத்தில் குற்றப்பழங்குடி சட்டத்தால் பாதிக்கப்பட்ட போயர் உள்ளிட்ட 68 சாதியினருக்கு, தமிழகத்தில் 1979 வரை பட்டியலில் இடம்பெறாத பழங்குடியினர் (டி.என்.டி.) என சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டது. இதன்பிறகு பட்டியலில் இடம்பெறாத சாதியினர் (டி.என்.சி.) என மாற்றி சாதிச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால், மத்திய அரசின் திட்டங்களை பெறுவதற்கு மட்டும் பட்டியலில் இடம்பெறாத பழங்குடிகள் என (டி.என்.டி.) சாதிச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதனால், தமிழகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் சலுகைகள், இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பு பெற முடியாமல் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, மத்திய அரசுப் பணிகளுக்கு வழங்கப்படுவதை போல, தமிழக அரசின் திட்டங்களை பெறுவதற்கும், பட்டியலில் இடம்பெறாத 68 சாதியினருக்கு பட்டியலில் இடம்பெறாத பழங்குடிகள் (டி.என்.டி.) என, சாதிச்சான்றிதழ் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.