ஜாமீனில்  வந்த சிறை வார்டன் கொலை

சேலத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த சிறை வார்டன், மர்ம நபர்களால் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சேலத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த சிறை வார்டன், மர்ம நபர்களால் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சேலம் சூரமங்கலம் புது சாலை பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (28). இவருக்குத் திருமணமாகி 11 மாத பெண் குழந்தை உள்ளது. 
சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணிபுரிந்து வந்த மாதேஷ் கடந்த ஆண்டு வீட்டு அருகில் கார் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார்.  வழிப்பறி வழக்கும் இவர் மீது உள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  பின்னர், துறை ரீதியான நடவடிக்கையில் மாதேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந் நிலையில், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த மாதேஷ் வீட்டின் அருகில் மீன் பண்ணை அமைத்துத் தொழில் நடத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார் எனக் கூறப்படுகிறது. 
வியாழக்கிழமை மாலை தனது நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மீன் பண்ணைக்குச் சென்று கொண்டிருந்தபோது, ஆண்டிபட்டி ஏரி அருகில்  வழிமறித்து காரில் வந்த மர்மக் கும்பல் மாதேஷை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.  உடன் சென்ற வெங்கடேஷ் தப்பி ஓடிவிட்டார்.
இதில் மாதேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.  தகவல் அறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற சூரமங்கலம் காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மாதேஷ் எதற்காக கொலை செய்யப்பட்டார்?, யார் கொலை செய்தனர்? என்பது குறித்து காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com