சேலம் அரசு மருத்துவமனையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், அரசு மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்ததில் நிகழ்ந்துள்ள முறைகேடுகளைக் கண்டித்தும், 14 ஆண்டுகள் பணியாற்றிய அரசு மருத்துவர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி ஊதிய உயர்வு அளித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பினர் சார்பில், சேலம் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் செந்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், சேலம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் ஏற்கெனவே மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்தநிலையில், 300 - க்கும் மேற்பட்ட பணியிடங்களை அரசு குறைத்துள்ளது. நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில் பணியிடக் குறைப்பு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, நோயாளிகளுக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சுகாதாரத் துறை அமைச்சர், செயலர் ஆகியோரிடம் பலமுறை மனு அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக அரசு மருத்துவர்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட உள்ளனர்.
அடுத்தக்கட்டமாக சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டமும், தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் வெளி நோயாளிகள் சிகிச்சையைப் புறக்கணிக்கும் போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம் என்றார்.