சமையல் செய்யும் போது சேலையில் தீப்பற்றியதில் காயமடைந்த பெண் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், வனவாசி ஓங்காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். நெசவுத் தொழிலாளி. இவரது மனைவி தமிழ்செல்வி (39). இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். கடந்த 6-ஆம் தேதி காலை தமிழ்செல்வி வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தபோது, அவரது சேலையில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்த அவர் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நங்கவள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.