சேலத்தில் காணாமல் போன சிறுவன் போலீஸ் கட்செவி அஞ்சல் குழு மூலம் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சேலம் மூனாங்கரடு பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (40). கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பூவண்ணன் (5). கடந்த வியாழக்கிழமை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பூவண்ணன் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த பூவண்ணனின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர்.
இந்தநிலையில், எருமாபாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சிறுவன் ஒருவன் தனியாக அழுதபடி நின்றுகொண்டிருந்தான். அப்பகுதி மக்கள் அந்த சிறுவனை மீட்டு கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சேலம் மாநகரிலுள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் பொதுமக்களை இணைத்து கட்செவி அஞ்சல் குழு துவங்கப்பட்டுள்ளது. இவ்வாறு 45 குழுக்களில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தவகையில், அன்னதானப்பட்டி குழுவில் ராமகிருஷ்ணன் இணைக்கப்பட்டிருந்தார். இவர் தனது மகன் பூவண்ணனை காணவில்லை எனக் குறிப்பிட்டு மகனின் படத்தையும் குழுவில் வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து அடுத்த 3 நிமிடங்களில் கிச்சிப்பாளையம் போலீஸார் மீட்கப்பட்ட சிறுவனின் படத்தை இந்த 45 கட்செவி அஞ்சல் குழுக்களிலும் வெளியிட்டு, இந்த சிறுவன் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் இருப்பதாக தெரிவித்தனர். கட்செவி அஞ்சல் மூலம் மகனை கண்டுபிடித்த ராமகிருஷ்ணன் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு விரைந்து மகனை பெற்றுக் கொண்டார்.