சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை
By DIN | Published On : 01st June 2019 10:28 AM | Last Updated : 01st June 2019 10:28 AM | அ+அ அ- |

வாழப்பாடி அருகே பிரசித்தி பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் மற்றும் வாழப்பாடி அக்ரஹாரம் காசி விஸ்வநாதர் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர்.
வாழப்பாடி அருகே பழமையான பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் பிரதோஷ தினத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு பழம், பால், தேன், சந்தனம், விபூதி, மலர் அபிஷேக ஆராதனைகளுடன், வெள்ளிக்கிழமை மாலை சிறப்பு பூஜை நடைபெற்றது. மூலவரான தான்தோன்றீஸ்வரர், தர்மசம்வர்த்தனி அம்பாளும் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
வாழப்பாடி அக்ரஹாரம் காசி விஸ்வநாதர் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில், நந்தீஸ்வரர், காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி அம்பாளுக்கும் அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். பக்தர்களுக்கு, பிரதோஷ வழிபாட்டு கட்டளைதாரர்கள் வாயிலாக அன்னதானம் வழங்கப்பட்டது.
வாழப்பாடியை அடுத்த வேப்பிலைப்பட்டி, விலாரிபாளையம் மோட்டூர், கல்யாணகிரி தேன்மலை சிவன் கோயில்களிலும், பிரதோஷ சிறப்பு பூஜை விமரிசையாக நடைபெற்றது.
சங்ககிரியில்...
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றன.
அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் சுவாமிக்கு காலையில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மாலையில் உற்சவமூர்த்தி சுவாமிகளுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்கள் நந்தியின் காதில் தங்களது வேண்டுதல்களை கூறியவாறு வழிபட்டுச் சென்றனர்.